Hashtag Generation

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் விலங்குகளா இவை?

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் தனிமையில் உள்ள உடல் மெலிந்த கரடி ஒன்றின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, தெஹிவளை மிருகக்காட்சிசாலையை மூட வேண்டுமென வலியுறுத்தி சமூகவலைத்தளங்களில் அதிகளவான பதிவுகள் வருவதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறானப் பதிவுகளில் பகிரப்படும் சிங்கம் மற்றும் குரங்கின் படங்கள் தவறானவை என்பதை ஹேஷ்டேக் தலைமுறை கண்டறிந்துள்ளது.

பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen shots)

 

ஒருவன் செய்தி இணையத்தளத்தின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)

சிங்கத்தின் படம் 
இந்த சிங்கத்தின் படத்தை Google reverse image search செய்தபோது, அல்பேனியா நாட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான சபாரி பார்க் மிருகக்காட்சிசாலையில் 2018ஆம் ஆண்டு காணப்பட்ட உடல் மெலிந்த சிங்கத்தின் படமே தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கத்தின் படமென கூறி பகிரப்படுவதை நாம் கண்டிறிந்தோம். 

இது தொடர்பில் Daily Mail வெளியிட்டிருந்த செய்தியை இங்கு பார்க்கலாம்.

இந்த சிங்கத்தின் படம் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள 4 சிங்கங்களின் படங்கள் பகிரப்பட்டிருந்தன.  

பேஸ்புக் பதிவின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)

குரங்கின் படம் 

மேற்குறித்த குரங்கின் படம் 2022 மார்ச் 29ஆம் திகதி Pexels என்கிற புகைப்பட இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  இந்தியாவின் அகமதாபாத்தில் 2019ஆம்  ஆண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை தொடர்பான பதிவுகளில் பகிரப்படும் குரங்கின் படம் தவறானது என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.

ஸ்கிரின் ஷாட்கள் (Screen Shots)


தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர்  தினுஷிகா மானவடுவும்,  தெஹிவளை மிருகக்காட்சிசாலை தொடர்பான பதிவுகளில் பகிரப்படும் சிங்கம் மற்றும் குரங்கின் படங்கள் தவறானது என்பதை ஹேஷ்டேக் தலைமுறைக்கு உறுதி செய்தார்.

மிருகக்காட்சிசாலையில் உள்ள உடல் மெலிந்த கரடியின் படம் தொடர்பிலும் நாம் தினுஷிகா மானவடுவிடம் வினவினோம், “சாதாரணமாக கரடி ஒன்றின் வாழ்நாள் 20-30 வருடங்களே இருக்கும். 

ஆனால், எம்மிடம் உள்ள கரடிக்கு 36 வயது. குளிர்காலத்தில் (Winter season) இதன் (கரடியின்) ரோமங்கள் உதிர்ந்து மறுபடியும் புதிய ரோமங்கள் வளரும். அதனாலேயே, கரடி மெலிந்த தோற்றத்தில் இருப்பதாகவும் கூறினார். 

மிருகக்காட்சிசாலையில் உள்ள 4 சிங்கங்களும் 2 சிங்கக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதன் பிரதிப் பணிப்பாளர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

முடிவுரை:  தெஹிவளை மிருகக்காட்சிசாலை தொடர்பான பதிவுகளில் பகிரப்படும் சிங்கம் அல்பேனியா நாட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான மிருகக்காட்சிசாலையில் 2018ஆம் ஆண்டு காணப்பட்ட சிங்கம் என்பதோடு, பகிரப்படும் விலங்குகளின் படங்களில் உள்ள குரங்கின் படம் இந்தியாவின் அகமதாபாத்தில் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்பதையும் உறுதி செய்துகொண்டோம்.
எனவே, தெஹிவளை மிருகக்காட்சிசாலை தொடர்பான பதிவுகளில் பகிரப்படும் சிங்கம் மற்றும் குரங்கின் படங்கள் தவறானவை என்பதை ஹேஷ்டேக் தலைமுறை உறுதி செய்கிறது. 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.