Hashtag Generation

நாயை தூக்கிச் செல்ல முயற்சிக்கும் சிறுத்தையின் வீடியோ இலங்கையில் பதிவானதா?

கூண்டில் அடைத்துள்ள வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை பிடித்துச் செல்ல முயற்சிக்கும் வீடியோ ஒன்று இலங்கையில் பதிவானதாகக் கூறி பேஸ்புக்கில் பலரும் அதனை பகிர்ந்து வருவதை ஹேஷ்டேக் தலைமுறை அவதானித்தது. 

Kls Fernando என்கிற பேஸ்புக் கணக்கில் “இந்த சிறுத்தையிடம் இருந்து எனது அன்பு நாய்களை எப்படி காப்பாற்றுவது? சுய மற்றும் சொத்து பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒருவர் பயன்படுத்தினால் என்ன பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்?” என குறிப்பிடப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. 

ஸ்கிரின் ஷாட் (Screen shot)

Ayale travel என்கிற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ புஸ்ஸல்லாவையில் பதிவானதாகத் தெரிவித்து பகிரப்பட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம். 

ஸ்கிரின் ஷாட் (Screen shot)

இந்த வீடியோவின் உண்மைதன்மை தொடர்பில் ஆராய்வதற்காக இந்த வீடியோவை Google Reverse Image Search செய்து பார்த்தபோது, இந்த வீடியோ இந்தியாவில் – கோத்தகரியில் பதிவானதாகக் குறிப்பிட்டு Ooty Express என்கிற யூடியூபில் பதிவேற்றப்பட்டிருப்பதை நாம் அவதானித்தோம்.

இந்தியாவின் – நீலகிரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தமிழ்நாடு நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி கௌதம் ஹேஷ்டேக் தலைமுறைக்கு உறுதி செய்தார். 

வனசீவராசிகள் திணைக்களத்தின் மஸ்கெலியா – நல்லத்தண்ணி அலுவலகமும் மேற்குறித்த வீடியோ இலங்கையில் பதிவானதல்ல, இந்தியாவில் பதிவானதாக எமக்கு உறுதிப்படுத்தியது. 

மஸ்கெலியாவில் வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை தாக்கியதாகக் குறிப்பிட்டு சீசீடீவி வீடியோ ஒன்று மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவகையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததையும் ஹேஷ்டேக் தலைமுறை அண்மையில் கண்டறிந்தது. 

முடிவுரை: கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தைப் பிடித்துச் செல்ல முயற்சிக்கும் வீடியோ இலங்கையில் பதிவானதல்ல என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.