Hashtag Generation

மலையக கவிஞருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா?

மலையகத்தைச் சேர்ந்த ஷாருலதா பாலகிருஷ்னண் என்கிற கவிஞர் “உலக சாதனைப் புத்தகம் (Nobel world record) சான்றிதழ் பதக்கம் விருது என் கைகளில்”  என குறிப்பிட்டு 04.01.2024 அன்று காலை 7.32க்கு தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டிருந்தார். 

அவர் பதிவிட்ட முகநூல்  பதிவின் முதலாவது மற்றும் எடிட் செய்யப்பட்ட (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட்களை  (Screenshots) இங்கே பார்க்கலாம்.

முதலாவது பதிவு

எடிட் செய்யப்பட்ட பதிவு

அதேதினத்தில் (04.01.2024) காலை 9.30 மணிக்கு எழுமின் செய்திகள் என்கிற பேஸ்புக் பக்கமொன்று, ஷாருலதா பாலகிருஷ்னணின் கவிதைகள் இடம்பெற்றுள்ள கவித்தேனருவி எனும் கவிதைத் தொகுப்பு நூல்  உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதோடு, ஷாருலதா பாலகிருஷ்னண் தனது பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதித்துள்ளதாக தெரிவித்து செய்தி ஒன்றை பதிவேற்றயிருந்தது.

குறித்த பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)

இந்த பதிவு பலமுறை எடிட் செய்யப்பட்டிருந்தது. அதன் ஸ்கிரின் ஷாட்கள்(Screenshots) 

மற்றொரு முகநூல் பயனரும் இதே செய்தியை வெளியிட்டிருந்ததோடு, “நோபல் பரிசும்” கிடைத்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த முகநூல் பதிவின் (Facebook Posts) ஸ்கிரீன் ஷாட் (Screenshots)

“கவித்தேனருவி என்கிற நூல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததா? அந்த நூலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா? ஷாருலதா பாலகிருஷ்ணனின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதா?” என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம்.

இதற்காக ஷாருலதா பாலகிருஷ்ணனை நாங்கள் தொடர்புக் கொண்டபோது, “10 ஆயிரம் கவிதைகளைக் கொண்ட கவித்தேனருவி என்கிற நூலில் எனது கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இந்த நூல் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில்,  இந்தியாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் NOBEL WORLD RECORD PVT LTD என்கிற தனியார் நிறுவனம் எனது கவிதைகள் அடங்கிய கவித்தேனருவி என்கிற புத்தகத்துக்கு NOBEL WORLD RECORD விருதை வழங்கியிருந்தது. இங்கே பார்க்கவும்  

இதனை நான் எனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற நோபல் பரிசு எனக்குக் கிடைத்ததாகவும், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எனது பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு தவறான செய்திகள் பரப்பப்பட்டன.” என தெரிவித்தார். 

தன்னுடைய முகப்புத்தக பதிவு சமூக வலைத்தள பயனர்களுக்கு தவறான செய்தியை வழங்கக்கூடும் என்பதால், ஷாருலதா பாலகிருஷ்ணன் தனது பதிவையும் மாற்றம் செய்திருந்தார். 

இதேவேளை, எழுமின் செய்திகள் என்கிற பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரிடம் இது பற்றி நாம் வினவியபோது, “ஷாருலதா பாலகிருஷ்ணனின் பேஸ்புக் பக்கத்தில் இடப்பட்டிருந்த பதிவைப் பார்த்துவிட்டு, அவருக்கு (ஷாருலதாவுக்கு) நோபல் பரிசு கிடைத்ததாகவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அவரதுப் பெயர் பதிவு செய்யப்பட்டதாகவும் தவறான செய்தியை வெளியிட்டிருந்தோம். 

எனினும், NOBEL WORLD RECORD PVT LTD  என்கிற தனியார் நிறுவனமே அவருக்கு விருது  வழங்கியிருப்பதை தெரிந்துகொண்ட பின்னர் அந்த செய்தியில் நாங்கள் மாற்றங்களை செய்திருந்தோம்.” எனவும் கூறினார்.

கின்னஸ் உலக சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் மற்றும் அதன் சமூகவலைத்தளப் பக்கங்களை இங்கே பார்க்கலாம்.  Facebook  Twitter  Youtube 

2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, நோர்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழிப்பெயர்ப்பாளரும், நாடக ஆசிரியருமான Jon Fosse என்பவருக்கே வழங்கப்பட்டுள்ளது. இங்கே பார்க்கவும்.

முடிவுரை : மலையகத்தைச் சேர்ந்த  ஷாருலதா பாலகிருஷ்ணன் என்கிற கவிஞரின் கவிதைகள் அடங்கிய ‘கவித்தேனருவி’ என்கிற நூலுக்கு இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் NOBEL WORLD RECORD PVT LTD  என்கிற நிறுவனம் வழங்கிய விருதை, சர்வதேச அளவில் அங்கீகாரமளிக்கப்பட்ட நோபல் பரிசு என குறிப்பிட்டு, சமூக வலைத்தளப் பயனர்கள் சிலர் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் என்கிற  முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.